விடுமுறை நாளதுவும்
வாசல்மணி அடித்ததுயார்!
மதியம்வரை தூங்கலாம் என
மனக்கோட்டை கட்டினேனே!
கதவைத்திறந்து பார்த்தால்
கல்லூரிக்கால நண்பன்!
கட்டியணைத்து "வா" என்றேன்!
நீட்டினான் அழைப்பிதழை!
மாட்டினானே மணவலையில்!
அழைப்பிதழை படிக்கையில்
அதிர்ச்சியில் உறைந்தேன் நான்!
இடம் : பாராளுமன்றத்திருமணக்கூடம்
பாராளுமன்ற அறையொன்றை
வாடகைக்கு விடுகிறார்களாம்!
விவரம் சொன்னான் நண்பன்!
"பாராளுமன்றம் வாடகைக்கு விடப்படுகிறது!!!"
சிக்கன நடவடிக்கையோ - என
சிரித்துக்கொண்டே மீதம் படித்தேன்!
பாராளுமன்றம் பார்க்கும் ஆவல்,
பிரதமரை பார்க்கும் ஆவல்,
பெருந்தலைகள் பார்க்கும் ஆவல்,
பெருக்கெடுத்த என் ஆவல்,
மாலை திருமணத்திற்கு
காலையே புறப்பட்டேன்!
வெள்ளை வேட்டி சட்டையில்
வளாகத்தின் உள்நுழைய
வலது காலை முதலில் வைத்தேன்!
வடசென்னையில் லட்சம் ஓட்டில்
வென்றுவிட்ட எம்.பி யாய்
உணர்ந்தேனே நானின்று!
மணமகன் அறைக்குள்ளே,
சன்னலின் உதவியாலே,
மக்களவை பார்க்கலானேன்!
கனவா நனவா
கிள்ளிப்பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இளைஞர்களின் விடிவெள்ளி
இரு கைகள் அசைத்தபடியே
இருக்கையில் வந்தமர்ந்தார்!
பிரதமராகத்துடித்தவர்
பவ்யமாக வருகைதந்தார்!
எதிர்க்கட்சியில் சிலரும்,
எதிர்க்காத கட்சியில் சிலரும்,
அங்கங்கே வீற்றிருக்க,
'அவை'யின் பல இருக்கைகள்,
அமர்வதற்கு ஆளின்றி,
அமைதியாய் உறங்கின!
விவாதம் துவங்கியதை
சபாநாயகர் அறிவித்தார்!
"நானு... நானு..."
ஆர்வக்கோளாரில்
கையுயர்த்தி
குரல்கொடுத்தேன்!
"அவசரபடாத தம்பி!
மாப்பிள்ளை தோழனுக்கும்
மேக்கப் போடுவேன்!"
மேக்கப்மேனின் கிண்டல் பேச்சு!
கொஞ்சம் வழிந்துவிட்டு
கவனத்தை திருப்பினேன்
மீண்டும் மக்களவைக்கு!
முதல் திட்டம்!
வியர்வையின் பணமாம்,
வருங்கால வைப்புநிதி
பங்கு வர்த்தகம்
பார்க்கப்போகுதாம்!
ஒரு சிலர் தவிர அங்கே,
ஒருவருமே எதிர்க்கவில்லை!
உறங்கியோர் எண்ணிக்கை உயர,
உள்ளிருப்போர் எண்ணிக்கையும் குறைய,
திட்டம் மேல் திட்டமாய்
தொடர்ந்து நிறைவேற,
காணவியலா காட்சியினை
கண்டுமனம் தவித்தேனே!
விலைவாசி உயர்வுபற்றி
விவாதம் தொடங்குதாம்!
இருபத்தாறு இருக்கையே
அமர்ந்திருப்போர் இருக்கையிப்போ!
என் ஊரின் எம்.பி. எங்கே
எங்கு நோக்கினும் காணவில்லை!
எத்தனைநாள் போஸ்டர் ஒட்டி
ஏற்றிவிட்டோம் பதவியினில்!
மக்களையும் பார்ப்பதில்லை!
மக்களவைக்கும் வருவதில்லை!
விலைவாசி உயர்வுதனை
விவாதிக்க ஆளில்லை!
ஆளும் கட்சி ஆண்ட கட்சி
அனைவரையும் காணவில்லை!
வேதனையும் வெறுப்புமென்னை
வெளியேற வைத்ததுவே!
நண்பனின் குரல்கேட்டும்
நடைபோட்டேன் அறைவெளியே!


