• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

வேலையோ வேலை.....

Thursday, July 29, 2010 9 comments


விழிதிறந்து பார்க்கையில்
வெள்ளிக்கிழமை இன்றென்று
விரட்டியது நாட்காட்டி!
விரைந்தேன் அலுவலகம் நோக்கி!

வெள்ளிக்கிழமைகளில்
வாராந்திர திட்டப்பணிக்கூட்டம்!

நிரலர்கள் யாவரையும்
நிற்கவைத்து கேள்விகேட்க
கூட்ட அறைக்குள்
கூட்டமாய் வந்தது
பரிசோதிக்கும் குழுவொன்று!

பிழைப்பட்டியல் கையில் வைத்து,
பரபரப்பையும் கூட்டி நுழைந்தனர்!

மேலாளர் இருவரும்
முதுநிலை மேலாளரும்
சிரிப்புமறந்த முகங்களாய்
இருக்கையிலே வந்தமர்ந்தனர்!

"பல பிழைகள் இருக்கே உன் நிரலில்?"
பறந்து வந்தது முதல்கேள்வி!

"அது வந்துங்க......."
அதற்குள் அடுத்த கேள்வி,

"இந்த பிழைக்கு எப்போது பிழைதிருத்தம் தருவாய்?"
"இது வந்துங்க........."

வேறு திசையிலிருந்து மற்றொரு கேள்வி,
"சென்ற வாரம் என்ன செய்தாய்?"

"வித்யாசமான வேலையேதும் செய்திருக்கிறாயா?"

"சென்ற ஞாயிறு ஏன் அலுவலகம் வரவில்லை?"

கேள்விகளை நீ கேட்கிறாயா
அல்லது நான் கேட்கட்டுமா - என்கிற
கேள்விக்கே இடமின்றி,
கேள்விக்கணைகள் நாட்புறமிருந்தும்
காதுகளை பதம் பார்க்க,
கதறி அழுதேன் எனக்குள்ளே!

சிக்கிட்டான்யா சீக்காழி- என
சுக்குநூறாய் அறைக்குள் நான்!

காதோரம் குருதிவழிய
கூட்டம்முடிந்து வெளியே வந்தேன்!

ஆறுமாதமாய் மாறாதவேலை!
ஏச்சுக்களும் பேச்சுக்களும்
எப்போதும் போல!

வேலையோ வேலையின்று!
வீட்டிற்கு கிளம்பினேன்!

கோயம்பேடு சிக்னல்,
கோபப்படவைத்ததென்னை!

வடபழனி சிக்னல்,
வெறுப்பேற்றியதென்னை!

வியர்த்து விறுவிறுத்து
வீடு வந்து சேர்ந்தேன்!

காலணியை கழற்றுகையில்
காதிலே விழுந்த வசனங்கள்!

"இருபது வருடமாய் காபி போடுற
இன்னுமா ஒழுங்கா போடத்தெரியல!"
இது என் அப்பா!

"வரும் ஞாயிறு நண்பர்கள் வராங்க
விருந்துக்கு ஏற்பாடு செய்"
இதுவும் அப்பாதான்!

"எப்ப பாத்தாலும் இதே கொழம்புதானாம்மா
ஏதாவது வித்யாசமா வெக்கத்தெரியாதா?"
இது என் அண்ணன்!

ஆணையிட்டோம் அதிரடியாய்
சிறுதுளியும் சிரிப்பின்றி!

"வேலையோ வேலையின்று"
வசனம்கேட்க காத்திருந்தேன்,
சமையலறை அருகில் நின்றே!

இருபதாண்டாய் வந்ததில்லை!
இப்போதும் அப்படித்தான்!



இணையத்தில் விவாதம் செய்யலாமா

Thursday, July 22, 2010 4 comments

ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற விவாதமானது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அது என்றுமே ஒரு மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேதான் இருந்துவந்திருக்கிறது. இதற்கு மாறாக அதிகப்படியான மக்களிடம் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகங்களில் ஒருவழித்தொடர்புதான் சாத்தியமாகிறது. அது வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சில் வெளியாகிற எழுத்துக்களாகட்டும், தலைவர்களின் மேடைப்பேச்சாகட்டும் - இவை அனைத்துமே மிகக்குறைந்த அளவிலேயே விவாதத்திற்கு வழிவகுத்தன.

தவறான தகவல்களுடனும், தனிப்பட்டமுறையில் நமக்கு ஏற்பில்லாத கருத்துக்களுடனும் வெளியாகும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் அந்த பத்திரிக்கையை மூடிவைத்துவிட்டு வேறு வேலையை பார்ப்பதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாது நம்மால்.

இணைய விவாதம்:
  • ஒரே தளத்தில் விவாதத்திற்கும் வழிவகுத்து, ஏராளமான மக்களையும் பங்கெடுக்க வைத்த பெருமை இணையத்தையே சாரும்.

  • இணையம் என்பதே ஒரு சோசலிசத்தின் உதாரணமாக பார்க்கப்படுவதால், எவரொருவரின் தனிப்பட்ட ஆதிக்கமும் அதிகாரமுமின்றி, இங்கு நடக்கும் விவாதங்களில் சுதந்திரமாக கருத்துசொல்ல முடிகிறது

  • மிகப்பெரிய எழுத்தாளன், ஆரம்ப நிலை எழுத்தாளன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், போராளி, வாசகன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல், கணிப்பொறியை இயக்கத்தெரிந்த எல்லோரும் குதித்து சரிசமமாய் நீச்சளிக்க வாய்ப்பளிக்கும், ஒரே விவாதக்குளமாக இருக்கிறது இணையம்

  • எவரும் எவருடைய உரிமையையும் பறிக்கமுடியாத காரணத்தால், கணிசமான அளவில் பெண்களின் பங்களிப்பும் இங்கே காணமுடிகிறது

ஆனால் இங்கே ஆரோக்கியமான விவாதங்களை நடத்த நாம் தயாராகியிருக்கிறோமா? என்கிற கேள்விக்கான விடையில்தான் மௌனம் நின்றுநீடிக்கிறது.

"என் கருத்து எனக்கு. உன் கருத்து உனக்கு. வா விவாதிக்கலாம்." - என்பது போன்ற விவாதங்களே இங்கு பெரும்பாலும் நடைபெறுகிறது.

தன்னுடைய அரசியல் சார்ந்த கருத்துக்கள் மட்டும்தான் இங்கே முன்னுரிமை பெறவேண்டும்(அது தவறான கருத்தென அறிந்தபோதும்கூட) என்கிற எண்ணமே, பகுத்தறியும் பார்வையை இருள்சூழவைக்கிறது.

நமக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் மட்டுமே விவாதம் செய்து பழக்கப்பட்டமையால், இது போன்ற ஒரு பரந்துவிரிந்த விவாதத்திற்கு நாம் தயாராகவில்லையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது.

"முயலுக்கு மூன்றுகால்" - ஒரு வாதம்
"முயலுக்கு இரண்டுகால்" - மற்றொரு வாதம்
"முயலுக்கு ஏழுகால்" - மற்றொரு வாதம்
"முயலுக்கு நாலுகால்" - மற்றொரு வாதம்

இவற்றில் எது உண்மை என்று அறியும் வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தமது கருத்தாக மாற்றுவதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை. இந்நிலை தொடர்ந்தால், நம்மால் இணையவிவாதங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவே இயலாதநிலைதான் ஏற்படும்.

சில நேரங்களில் மாற்றுக்கருத்துடையோரை முடிந்த அளவிற்கு மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பது போன்ற நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

'காலம் காலமாய் நான் சொல்லி வந்திருக்கிறேன். நீ கேட்டு வந்திருக்கிறாய். இப்போது மட்டும் என்ன கேள்வி கேட்கிறாய்' என்கிற தொனியிலே அதிகாரவர்க்க அங்கத்தினரின் குரல்களும் ஆங்காங்கே விவாதங்களில் காணக்கிடைக்கிறது.

ஊழலும் சுரண்டலும் மிகுந்த பல அரசியல்கட்சிகளுக்குக்கூட கூடைதூக்கிக்கொண்டு விவாதத்தில் பங்கெடுக்கிறார்கள், அக்கட்சிகளின் அத்தலைவர்களின் உண்மை நிலவரம் அறிந்தே.

விவாதங்கள் என்றுமே நல்லதுதான், அவை சரியான தீர்வுகளை நோக்கி பயணிக்க முயல்கிறவரை.....


இணைய விவாதத்திற்கு முதல்தலைமுறையான நாம்தான் சரியான தளம் அமைக்கவேண்டும். இல்லையேல் இனிவரும் தலைமுறையும் இதையே பின்பற்றும்.




டீலா நோ டீலா

Wednesday, July 21, 2010 2 comments

"டீலா நோ டீலா"
விளையாட்டு நிகழ்ச்சிதானே - என
விளையாட்டாய் பார்க்கலானேன்!


குடிசைக்குள்ளிருந்து ஒரு
கிழவி பேசினாள்!

"அப்பா இல்லை
அம்மா இல்லை!
உழைத்துதான் முன்னேறுவேன்
உறுதியில் என்பேரன்!
போட்டியிலே வெற்றிபெற்று
பெரிதாய் சாதிக்க - என்
பேரனையே வாழ்த்துங்களேன்"

அடப்பாவிகளா
ஆரம்பிச்சிட்டீங்களா - என
ஆத்திரப்படும்நேரம்
அருகிலேகேட்டது
அம்மாவின் விசும்பல்!



தனி தெரு கேட்டு போராட்டம்...

Friday, July 2, 2010 2 comments

நான் பிறந்தது முதல் வசித்து வருவது நேதாஜி நகரின் இரண்டாவது குறுக்குத்தெருவில். இரண்டாவது குறுக்குத்தெரு என்பது இரண்டாவது தெருவையும் மூன்றாவது தெருவையும் இணைக்கிற ஒரு சிறிய தெருவாகும்.

"டேய் இதெல்லாம் ஒரு தெருவா? குறுக்கு சந்தையெல்லாம் தெரு கிறுன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்கடா......" என்பன போன்ற வார்த்தைகளை கேட்டாலே கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு. ஆனாலும் 2 ஆவது தெரு பசங்களும் சரி, 3 ஆவது தெரு பசங்களும் சரி எங்களை இப்படி கிண்டல் செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.

எங்களது தெருவில் இருப்பது மொத்தமே நான்கு வீடுகள்தான். அதிலே என் வயதொத்தவர்கள் மொத்தமே நான்கு பேர்தான். நட்பு, மோதல், விளையாட்டு - எல்லாமே எங்கள் நால்வருக்குள்தான்.

காலப்போக்கில் வேறு வழியில்லாமல் நாங்கள் 2 ஆவது தெரு பசங்களோடு விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் எங்களது தெருவின் பெயரிலேயே "2" இருப்பதனால் வேறு தெரு பசங்களோடு விளையாடுவது என்பது இயலாத காரியமாயிற்று. கில்லி, கோலி, பம்பரம், கிரிக்கெட் எல்லாம் அவர்களோடு விளையாடுவோம். இருந்தாலும் எப்போதும் எங்களுக்குள் ஒரு போட்டி இருந்துகொண்டேதான் இருந்தது.

அப்போதுதான் நேதாஜி நகரில் கிரிக்கெட் போட்டி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. நாங்களும் 2 ஆவது தெரு பசங்களும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினோம். எங்கள் தெருவுக்கும் அவர்கள் தெருவுக்கும் பொதுவாக இருக்கிற ஒன்றே ஒன்று "2 ". ஆகவே டெண்டுல்கர் மேல் நாங்கள் வைத்த அன்பையும் சேர்த்து 2டுல்கர் (2dulkar) என்று எங்கள் அணிக்கு பெயர் வைத்தோம். எங்களது அணியின் பெயர் மிகவும் பிரபலமானது.

அணியின் தலைவனாக 2 ஆவது தெருவின் ரகுவை எல்லோருமாக சேர்ந்து தேர்ந்தெடுத்தோம். விக்கெட் கீப்பர் பொறுப்பு எங்கள் 2 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த செந்தில் ஏற்றான். அவன் ஒரு நல்ல தொடக்க ஆட்டக்காரனும் கூட. எங்கள் அணியின் சேவாக் என்று சொல்வோம் அவனை. அவனுடைய பாட்டி வீடு 2 ஆவது தெருவில் இருப்பதனால் அந்த பசங்களுடன் அவனால் இயல்பாக ஒத்துபோக முடிந்தது. அணியின் வேகபந்துவீச்சாளர் அடியேன் நாந்தான்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியும் வந்தது. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு எங்களது அணி மிகச்சிறப்பாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் வென்றுகொண்டே இருந்தோம். ஒவ்வொரு வெற்றியும் எங்களது குறுக்குதெரு பசங்களின் திறமையால்தான் கிடைக்கிறது என்கிற எண்ணம் எங்கள் மனதில் ஆழமாக வேரூன்ற துவங்கியது.

அரையிறுதி ஆட்டம்: முதலில் பேட்டிங் செய்த நாங்கள், மிகவும் மோசமாக விளையாடி வெறும் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் பந்து வீச துவங்கினோம். முதல் ஓவரை வழக்கம் போல் நான் வீசினேன். தொடர்ந்து 2 நான்குகள் (fours) அடித்துவிட்டார்கள் எதிரணியினர். எங்கள்

அணித்தலைவன் ரகு என்னைபார்த்து,
"டேய், வெறும் 35 ரன்தாண்டா அடிச்சிருக்கோம். லெக் சைட்ல போடாதடா...ஆப் சைட்லையே போடறா..." என்றான்.
"அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா" என்றேன்.

அதன் பிறகு அந்த போட்டியில் எனக்கு பந்துவீசவே வாய்ப்பு தரப்படவில்லை. எதிர்பாராத விதமாக திடீரென முதல் முறையாக பந்து வீசிய நாராயணனுக்கு 3 விக்கெட்டுகள் விழ, ஆட்டத்தின் போக்கே மாறி போனது.

தட்டுத்தடுமாறி, முட்டிமோதி 2 ரன் வித்தியாசத்தில் நாங்கள் அறையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டோம்.

உற்சாகத்தில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ரகு என்னைப்பார்த்து சொன்னான்,
"டேய், பௌலிங் போடறது எப்படின்னு நாராயணன்கிட்ட கத்துக்கடா. நீயெல்லாம் என்னத்த போட்ற..." என்று எல்லைகளை மீறி கிண்டல் செய்துகொண்டே வந்தான்.

2 ஆவது தெரு பசங்க ஒவ்வொருவராய் சேர்ந்துகொண்டு எங்களது குறுக்கு தெரு பசங்களையே குறிவைத்து கிண்டல் செய்வது போல் இருந்தது.
இனியும் பொறுப்பதற்கு இல்லை என்று நாங்களும் திருப்பி பேசினோம். வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறி, கால்சண்டையாகிப்போனது.
அன்று இரவு, எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் நால்வரும் சந்தித்தோம்.
தனி தெருவாக நாங்கள் இனி வரும் போட்டியை சந்திப்பது என்று முடிவெடுத்துக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது என் தந்தை அங்கே வந்தார். "என்னங்கடா? என்னாச்சி? இநத இருட்டுல மொட்டை மாடியில போயி உக்காந்து பேசிக்கிட்டுருக்கீங்க? "

எல்லா விவரத்தையும் சொன்னேன் என் அப்பாவிடம்.
2 ஆவது தெரு பசங்களையும் கூட்டிட்டு வர சொன்னாரு. அவனுங்களும் வந்தானுங்க.
அப்பா சில கேள்விகள் கேட்டாரு.

1. "கேப்டன் பதவி வேணுங்குற ஆசையில போர்க்கொடி தூக்குவானுங்க. அந்த மாதிரி".......என்று இழுத்தார்.
"இல்லப்பா" என்கிற ரீதியில் தலை அசைத்தேன்.

2 . "இன்னொரு குழுவை நம்முடைய குழுவுடன் சேர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய தேவைக்காக மட்டுமே செர்த்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்களின் சிறு சிறு தவறுகளை கூட நம்மால் சகித்துக்கொள்ள முடியாமல் போய்விடும்".

3 . தனியாக பிரிந்தால் நம்மால் நம்முடைய இலக்கை அடைய முடியுமா என்று யோசிக்க வேண்டும். நான்கு பேரை வைத்து நீங்க என்ன பண்ண முடியும், ஏழு பேரை வெச்சி அவங்க என்ன பண்ணமுடியும்.

4 . குழுவை, கூட்டத்தை, அணியை, மக்களை பிரிக்கிறதுக்கு முன்னாடி, ஏன் பிரிக்கிறோம், யாருக்காக பிரிக்கிறோம், பிரிச்சபிறகு நம்மோட குறிக்கோள் நிறைவேறுமா என்பதை நல்லா யோசிச்சி முடிவெடுக்கணும்.

"உங்களுக்குள்ள நடந்த சண்டைக்கு காரணம் இன்றைக்கு நடந்த நிகழ்ச்சியா தெரியல. உங்க ஆழ் மனசுலையே நீங்க ரெண்டு குழுவா இருக்கீங்க. அத சரி பண்ணாம நீங்க ஒண்ணா சேர்ந்து வெளையாடி இருக்கீங்க. அதனால வந்த விளைவுதான் இது. பேசி தீத்துக்குங்க" என்றார்.

"தீத்துக்குறோம்....தீத்துக்குறோம்....தீத்துக்குறோம்...." என்று அலறிக்கொண்டிருந்தேன்...
"என்னடா கனவா?" - அப்பாவின் குரல்...

நேற்று தொலைகாட்சி செய்தியில் பார்த்த தெலுங்கானா போராட்டம்தான் கனவுக்கு காரணமோ...விடை தெரியாமல் விழிமூடி உறங்கலானேன்.....



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum