செல்லமகளை தூங்கவைக்க
மெல்ல முதுகில் தட்டியபடி,
வாயில்வந்த பாடலினை
தாளம்தப்பிப்பாடியபடி,
நிமிடங்கள்சில கடப்பதற்குள்
நானே கண்ணயர்ந்தேன்!
கனவுகளுக்குள்ளும் நுழைந்தநேரம்
கன்னத்தை அழுத்துகிற உணர்வொன்று
மெதுமெதுவாய் எழுப்பிவிட
மெல்லகண்களை விரித்துப்பார்க்கையில்,
முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தை விலக்கிக்கொண்டு
எந்தன் நெஞ்சினில்தட்டியபடியே,
"தூங்குப்பா தூங்கு...
தூங்குப்பா தூங்கு...
தூங்குப்பா தூங்கு..."
சொல்லிக்கொண்டிருந்தாள்
செல்லமகள் என்னருகே!
உறக்கம் கலைந்தாலும்
விழித்த என் கண்களை
வேகமாக மூடிக்கொண்டேன்...