• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

பெண்களுக்கும் ஆசைகளுண்டு... அதன்படி வாழ உரிமையுமுண்டு.... (Bread and Tulips - Italian Film)

Sunday, December 11, 2011 0 comments


 1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தினர் சிறுபான்மை டூட்சி மக்களை இனப்படுகொலை செய்த நிகழ்வினை சொல்லும் திரைப்படமான "Shaking hands with the Devil" இல் ஒரு காட்சியில் ஹூட்டு இனத்தை சார்ந்த பெண் பிரதமரிடம் ஐ.நா. தூதுவர் கேட்பார்,
"நீங்க ஹூட்டுவா? டூட்சியா?"
"நான் ஹூட்டு தான்" - அப்பெண்
"நெனைச்சேன்" - தூதுவர்
"ஹூட்டுவாக இருந்தா என்ன? டூட்சியாக இருந்தா என்ன? பெண்ணாக இருக்கிறேனே! அதைவிடவா பெரிய கொடுமை இருந்துவிடப்போகிறது? நான் சிறுபான்மை டூட்சியாக இருந்தாலும், பெரும்பான்மை ஹூட்டுவாக இருந்தாலும், பெண்ணான எனக்கு கிடைக்கிற மரியாதை ஒன்றுதான் :-(" என்கிற பொருள்பட பதிலளிப்பார் அப்பெண்மணி.


இனம், மொழி, நிறம், சாதி, மதம், தேசம் என உலகின் எல்லா வேறுபாடுகளையும் கடந்து, எவ்வினமானாலும் எம்மொழியானாலும் எந்நிறமானாலும் எச்சாதியானாலும் எம்மதமானாலும் எந்நாடானாலும் அதிக அளவினாலான அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் சுரண்டலுக்கும் பெண்ணினம் ஆளாகிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குடும்பத்தலைவி என்கிற அதிகாரமற்ற ஊதியமற்ற பதவியின் துயரம் சொல்லிமாளாது.


குடும்பமென்கிற மரமே பெண்களை உரமாகவோ விதையாகவோ மண்ணுக்குள் புதைத்துவிட்டு வளர்(க்)கிற ஒன்றுதான். 'இந்த சமூகம் உன்னை ஒன்றும் சொல்லாது. உனக்கு என்ன பிடிக்கிறதோ அதனை செய்துகொள்' என்று இக்குடும்பக்கட்டமைப்பில் வாழ்கிற பெண்கள் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமானால், குடும்பங்கள் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.


கதைச்சுருக்கம்:
ஒரு குடும்பத்தின் தலைவியாக வீடு-கணவன்-பிள்ளைகள் என்று அன்றாட வேலைகளை செய்துகொண்டு தனக்கான வாழ்க்கையை வாழமுடியாமல் இருக்கிற பெண்ணொருத்திக்கு திடீரென வேறுவொரு புதிய இடத்தில் புதிய மனிதர்களுடன் புதிய வாழ்க்கையை துவங்குகிற வாய்ப்பு கிடைக்கிறது. அப்புதிய இடத்தில் அவள் எப்படி பொருந்திப்போகிறாள், அவளால் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடிந்ததா இல்லையா என்பதனை அப்பெண்ணுடன் நம்மை பயணிக்க வைத்து சொல்லப்பட்டிருக்கிறது இத்திரைப்படத்தின் கதை.


 திரைக்கதை:
இத்தாலியில் பெச்குரா என்கிற நகரில் வாழும் ரோசல்பா தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளுடன் பேருந்து பயணமாக ஊர் சுற்றிப்பார்க்கச்செல்கிறாள். மனைவியிடத்தில் மட்டும் அன்பை மறந்த கணவனுடன், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவன் அழைத்துச்செல்கிற இடத்திற்கெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக உடன்செல்கிறாள்.


செல்லும் வழியில் ஓருணவகத்தில் பேருந்து நிற்கிறது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கி சிலர் உணவு வாங்குவதும், சிலர் கழிவறைக்கு செல்வதுமாக அவரவர் வேலையினை செய்துமுடித்து பேருந்திற்கு திரும்புகிறார்கள். ரோசல்பாவின் மோதிரம் எதிர்பாராதவிதமாக அங்கிருக்கும் கழிவறையில் விழுந்துவிடுகிறது. படாதபாடு பட்டு ஒருவழியாக அதனை எடுத்துவிட்டு உணவகத்தின் வெளியே வந்து பார்த்தால், அவள் வந்த பேருந்து அவ்விடத்தை விட்டு கிளம்பியிருக்கிறது. இப்போது உலகமே வெறுமையாகக் காட்சியளிக்கிறது அவளுக்கு. வீடு-கணவன்-குழந்தைகள்-அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வழிமுறைகள் தவிர வேறொன்றும் தெரியாதவளுக்கு. உடனே அங்கிருக்கும் கடையொன்றிலிருந்து கணவனின் அலைபேசி எண்ணுக்கு அழைக்கிறாள். மறுபுறத்திலிருந்து பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் கணவனின் கடுஞ்சொற்களால் சற்றே நிலைதடுமாறிப்போகிறாள். அவனுடைய வருகைக்காக காத்திராமல், சாலையில் நின்று, போகிற வருகிற வண்டிகளின் முன்பெல்லாம் கை நீட்டிப்பார்க்கிறாள். சிறிது நேரத்தில், ஒரு வண்டி அவளினருகே நிற்கிறது.வண்டியினை ஒட்டிக்கொண்டு வந்தவன், வெனிஸ் என்கிற நகருக்கு போவதாகவும், அவளது ஊருக்கு செல்லவேண்டிய பாதையில் இறக்கிவிடுவதாகவும் சொல்லி அவளை வண்டியில் ஏற்றிக்கொள்கிறான். போகிற வழியில்,  அவன் தூங்கிவழிந்துகொண்டே வண்டியோட்டுவதைப்பார்த்து அவள் பயம்கொள்கிறாள்.
 
அவளுடைய பயத்தை அறிந்தவன், 'உனக்கு வண்டி ஓட்டத்தெரியுமா?' என்கிறான்.
'கொஞ்சம் தெரியும்' என்று சொல்லி அவள் ஓட்டத்துவங்குகிறாள். வண்டியோட்டுகிற போது அவளது நிலையினையும் மறந்து மகிழ்ச்சியாகிறாள்.
எப்படிப்போகவேண்டுமென்று கேட்கமுடியாத அளவிற்கு அவன் நல்ல ஆழ்ந்த தூக்கதிலிருக்கவே, இவள் தொடர்ந்து நேர்சாலையில் சென்றுகொண்டே இருக்கிறாள்.
சில மணிநேரத்திற்குப்பிறகு அவனும் கண்விழிக்க, இப்போது அவர்கள் வந்து சேர்ந்திருக்கிற இடம் இத்தாலியின் வெனிஸ் நகரம். நீண்டநெடுங்காலமாக பார்க்கவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த நகரமிது. வண்டியோட்டுவதில் துவங்கிய அவளது மகிழ்ச்சி, வெனிஸ் நகரைப்பார்த்ததுமே மேலும் சிலமடங்கு அதிகரிக்கிறது.

தன்னை மறந்து, தன்னிலை மறந்து வெனிஸ் நகரின் தெருக்களையும் கடல்நீர்சூழ்ந்த அந்நகரினையும் பார்த்துப்பார்த்து மகிழ்கிறாள் ரோசல்பா. சில மணிநேரங்கள் கழிந்தபின்னர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிச்செல்ல வேண்டுமென்பது நினைவுக்கு வந்ததும், இரயில் நிலையத்திற்கு சென்று அவளுடைய ஊரிற்கு செல்வதற்கான இரயில் எப்போது வருமென விசாரிக்கிறாள். சற்றுமுன்னர்தான் அவளது ஊரிற்கு செல்லும் இரயில் சென்றதாகவும் அடுத்த இரயில் நாளைதான் வருமென்பதையும் கேள்விப்பட்டு அதிர்ந்துபோகிறாள். என்ன செய்வதென்றே தெரியாமல், மெதுமெதுவாக அழகான அவ்வெனிஸ் நகரில் நடக்கிறாள். பகலின் ஒளி தீர்ந்து, இரவின் இருட்டு வெனிஸ் நகரோடு சேர்த்து அவளையும் மெல்ல மெல்ல அணைக்கத்துவங்கியது. ஒரு புறம் பசியிருக்க மறுபுறம் இரவை நினைத்து அவளை ஆட்கொள்ளத்துவங்கியது பயம்.


ஒரு சிறிய உணவகத்தினுள் நுழைந்து உண்பதற்கு என்ன இருக்கிறதென்று கேட்கிறாள். சூடாக எதுவுமில்லையென்றும் ஆறிப்போன ரொட்டி மட்டுமே இருப்பதாகவும் உணவக உரிமையாளர் சொல்கிறார். சரியென்று சொல்லிவிட்டு கிடைத்ததை உண்கிறாள். உண்டு முடித்ததும், மெல்ல அவ்வுணவக உரிமையாளரிடம் சென்று,
'தங்குவதற்கு இங்கு ஏதேனும் இடம் கிடைக்குமா?' என்கிறாள்.
அவளிடம் இருக்கும் மிகக்குறைந்த பணத்திற்கு எவ்விதமான இடமும் கிடைக்காது என்று சொல்லிவிட்டு, அவனது வீட்டினிலிருக்கும் பயன்படுத்தியேயிராத ஓர் அறையினை காண்பித்து தங்கிக்கொல்லச்சொல்கிறான். காலையிலெழுந்து வீட்டினை விட்டு வெளியேறுகையில், சாவியினை வாசலிலிருக்கும் அஞ்சற்பெட்டியினுள்ளே போட்டுவிடும்படியும் சொல்கிறான். 'நன்றாக தூங்கு' என்று சொல்லிவிட்டு அவனது பெயர் 'பெர்னாண்டோ' என்கிறான்.


மறுநாள் காலை அறையினை பூட்டிவிட்டு சாவியினை அஞ்சற்பெட்டிக்குள் போட்டுவிட்டு, இரயில் நிலையத்திற்கு செல்கிறாள். அங்கே அவளுக்கு முன்பாகவே அவளது ஊருக்கு செல்லும் இரயில் பயணத்தை துவங்கிவிட்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியாமல் மீண்டும் வெனிஸ் தெருக்களில் நடக்கிறாள். நடக்கிற வழியில், ஒரு வீட்டின் முன்பே 'வேலைக்கு ஆள் தேவை' என்றொரு விளம்பரத்தை பார்த்து, உள்ளே சென்று வேலை கேட்கிறாள்.
'இது ஒரு தோட்ட வேலை. எனக்கு ஒரு ஆண்தான் வேலைக்கு வேண்டுமென்கிறார்' கறாராக பேசும் ஒரு தாத்தா.
'என்னால் இவ்வேலையினை செய்யமுடியும். பெச்குரா நகரின் அரண்மனையில் எங்கப்பா ஒரு தோட்டத்தொழிலாளி' என்கிறாள் ரோசல்பா.
உடனே அங்கே வேலை கிடைத்துவிடுகிறதவளுக்கு.


மாலையானதும், முந்தைய நாள் தங்கிய பெர்னாண்டோவின் வீட்டிற்கே வருகிறாள். காலையில் அஞ்சற்பெட்டியில் போட்ட சாவியினை கைவிட்டு எடுத்து மீண்டும் அவள் தங்கிய அறைக்கே செல்கிறாள். பெர்னாண்டோ வீடு வந்து சேர்வதற்குள் மற்றுமொரு அறையினில் வாடகைக்கு தங்கியிருக்கும் கிரேசியா என்கிற பெண்ணுடன் பேசிப்பழகி தோழியாகிறாள். அங்கே தங்குவதற்கு பெர்னாண்டோவிடமும் அனுமதி வாங்கிக்கொள்கிறாள். தனக்கு வேலை கிடைத்துவிட்ட செய்தியை தன்னுடைய கணவனுக்கு கடிதமாக எழுதுகிறாள்.


மறுபுறம் ரோசல்பாவின் கணவன் அவளது கடிதம் படித்துவிட்டு கடும் கோபத்திற்கு ஆளாகிறான். ரோசல்பா வரவில்லையே என்கிற வருத்தத்தைவிட,  வீடு சுத்தம் செய்யாமல் படுமோசமான நிலையிலிருக்கிறதே, நல்ல உணவு கிடைப்பதில்லையே  என்கிற வருத்தமே அவனிடத்தில் அதிகமாகத்தென்படுகிறது. அவனது நிறுவனத்தில் வேலைதேடி நேர்முகத்தேர்வுக்காக வருகிற ஒரு குழாய்ப்பணியாளர் (Plumber), தன்னுடைய தற்குறிப்பில் (Biodata), துப்பறியும் கதைகள் படிப்பது பொழுதுபோக்கு என்று எழுதியிருப்பதை பார்க்கிற ரோசல்பாவின் கணவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வெனிசில் இருக்கும் ரோசல்பாவை துப்பறிவதற்காக அக்குழாய்ப்பணியாளனை (கான்ஸ்டாண்டினோ) வேலைக்கமர்த்துகிறான். ரோசல்பா எங்கிருக்கிறாள்? என்னவெல்லாம் செய்கிறாள்? என்பதனை வேவு பார்த்து அவளது கணவனுக்கு சொல்வதுதான் கான்ஸ்டாண்டினோவின் வேலை. அதன்படி கான்ஸ்டாண்டினோ வெனிஸ் செல்கிறான்.

இதற்கிடையே ரோசல்பா தன்னுடைய புதிய வாழ்க்கையினை அழகாக வாழத்துவங்குகிறாள். விடுதி உரிமையாளரான பெர்னாண்டோவின் அன்பு, கிரேசியாவின் நட்பு, அவளுக்கு வேலை கொடுத்த தாத்தாவுடனான தந்தை-மகள் உறவு என்று அவளது புதிய சூழல் அவளுக்கு பிடித்தமான இடமாக மாறிவிட்டிருந்தது. பெர்னாண்டோவின் கவலைமிகுந்த கடந்தகால சோகத்திலிருந்து மீண்டுவர ரோசல்பாவின் அன்பும் நெருக்கமும் அவருக்கும் உதவிற்று. அவளுக்குப் பிடித்த (வாசிக்கத்தெரிந்த) இசைவாத்தியமொன்று பெர்னாண்டோ வீட்டினில் காண்கிறாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து வாசிக்கவும் செய்கிறாள்.
ரோசல்பாவை துப்பறிய வந்த கான்ஸ்டாண்டினோ, வெனிஸ் முழுவதும் எல்லாத்தெருக்களிலும் அவளது புகைப்படத்தை 'தேடுகிறோம்' என்றெழுதி ஒட்டிவிடுகிறான். எங்கு திரும்பினாலும் தன்னுடைய புகைப்படமே இருப்பதைக்கண்டு பயந்து நடுங்குகிறாள். பெர்னாண்டோ அவளை சமாதானப்படுத்தி,
தன்னுடைய உணவகத்தில் உணவு கொடுக்கிறான். பிறகு அருகிலிருக்கும் ஓர் நடன அரங்குக்கு அழைத்துச்செல்கிறார். அந்த நடன அரங்கினில் ஆடவேண்டுமென்பது தன்னுடைய நீண்டநாள் ஆசையென்று சொல்கிறார் பெர்னாண்டோ. அப்படியே இனிதாகக்கழிகிறது அம்மாலைப்பொழுதவர்களுக்கு.

தனக்குப்பிடித்தவகையில் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதனை நன்கு உணரத்துவங்குகிறாள் ரோசல்பா. நாட்கள் நீண்டுகொண்டே போனாலும், அவளது கணவனிடம் மீண்டும் செல்லவேண்டுமென்ற எண்ணமெல்லாம் தோன்றுவதேயில்லை. திடீரென ஓர் நாள், அவளது மகன் போதைபழக்கத்துக்கு அடிமையாகிறான் என்கிற தகவல் வந்துசேர்கிறது அவளுக்கு. இப்போது எதையுமே நினைத்துப்பார்க்காமல், தன்னுடைய மூட்டை முடிச்சுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகள் இருக்கும் பெச்குரா நகருக்கு செல்லப்புறப்படுகிறாள். பெர்னாண்டோவின் கண்ணீருக்கு பதில் சொல்லாமலும், கிரேசியாவின் வேண்டுகோளை நிராகரித்தும், மீண்டும் கணவரிடமே செல்கிறாள்.

நாட்கள் பல நகர்ந்த பின்னரும், ரோசல்பா கணவருடனே வாழ்கிறாள். ஒரு நாள் அவள் தன் மகனுடன் கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, அவளது காரின் அருகே நின்றுகொண்டிருக்கிறார் பெர்னாண்டோ. அவள் அதிர்ந்தே போகிறாள்.
"இவன் என்னுடைய மகன் நிகோலா.... இவர்தான் பெர்னாண்டோ" என்று தன் மகனுக்கு பெர்னான்டோவையும் பெர்னான்டோவிற்கு மகனையும் அறிமுகப்படுத்துகிறாள்.

பெர்னாண்டோ, ரோசல்பாவின் மகனிடம், "இது உனக்கு சற்று வினோதமாகத்தோன்றலாம். ஆயினும் நான் உங்க அம்மாவை அழைத்துப்போக வந்திருக்கிறேன்" என்று சொல்கிறார்.
"எதற்கு?" என்கிறான் நிகோலா.
"ஏன்னா.... ஏன்னா..... ஏன்னா.... நான் அவளை காதலிக்கிறேன்...." என்கிறார் பெர்னாண்டோ.
எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள்...

காட்சி மாறுகிறது.... இப்போது ரோசல்பா தனக்குபிடித்த இசைவாத்தியத்தை வாசிக்கிறாள்... பெர்னாண்டோ தனக்குப் பிடித்த நடனத்தை அவளது இசைக்கேற்ப ஆடுகிறார்... அவர்கள் இருக்கிற இடமோ வெனிஸ் நகரில் அவர்களுக்குப்பிடித்த அதே பழைய நடன அரங்கு...



அக்டோபர் மாத சுவரெழுத்துகள்....

Friday, December 2, 2011 0 comments

"தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதால் இந்தியாவுக்கு முதலீடு வாய்ப்புகள் தடைபடுகிறது" --- இந்த உலகமகா தத்துவத்தை சொன்னவர் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்.
"ஆமா ஆமா... அவர் சொல்வது சரிதான்" --- காங்கிரஸ் மேலிடம்...

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளை அள்ளிவீசுறது மட்டும் பத்தாதுன்னு, இப்போது சட்டத்திலிருந்தே விலக்கு கொடுக்கணும்னு சொல்லாம சொல்றாரோ சட்ட அமைச்சர்!!!!!!!
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியா ண்டின் முடிவில் ரூ. 71,047 கோடி. இது கடந்த ஆண்டைவிட ரூ. 14 ஆயிரம் கோடி அதிகம். இதில் ஏறத் தாழ ரூ. 50 ஆயிரம் கோடி கார்ப் பரேட் நிறுவனங்கள் தரவேண்டிய வாராக்கடன்.
உலகிலேயே அதிக அளவிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா (2010 இல் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்திருக்கிறது)
உலகிலேயே அதிக அளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா (2010 இல் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்திருக்கிறது)
இவ்விரண்டு தகவல்களுக்குமிடையிலான தொடர்பினை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்...
உலக அமைதி குறித்தும், மனித நேயம் குறித்தும் வாய் கிழிய பேசிவரும் அமெரிக்காவும், இன்னபிற வளர்ந்த ஐரோப்பிய நாடுகளும், எதற்காக இவ்வளவு பெரிய ஆயுத உற்பத்தியில் ஈடுபடவேண்டும்?

தங்கள் நாட்டுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், தங்கள் நாடு அமைதியான நாடு என்றும் தண்டோரா போடும் அமெரிக்கா, ஒரு புறம் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவை ஒழிக்க புறப்படுவதும், மறுபுறம் லிபியாவில் அல்கொய்தா ஆதரவுடன் செயல்படும் கிளர்ச்சிக்குழுக்களுக்கு
ஆயுதங்களை வழங்குவதும் எதற்காக?

எல்லாம் வியாபாராம்தான்... வெறும் காசுக்காகதான்...

மூன்றாம் உலக நாடுகளின் மக்கள், கூட்டம் கூட்டமாக அழிந்தாலும் பரவாயில்லை என்று இவர்கள் நடத்துகிற ஆயுத அரசியலை என்னவென்று சொல்ல....
"இங்கே இந்த வேட்பாளர் முன்னிலை"
"அங்கே அந்த வேட்பாளர் முன்னிலை"
என்று ஒவ்வொரு தேர்தல் முடிவுகளை பார்க்கத்துவங்கும்போதெல்லாம், இம்முன்னிலையினால் மக்கள் "முன்னுக்கு" வந்துவிடமாட்டார்களா என்கிற ஏக்கம் கலந்த கேள்விதான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....
"உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப்போவது யார்?" என்று ஆளாளுக்கு மண்டைய போட்டு குழப்பிக்கிட்டு இருந்தாங்க... இப்பதான் விடையே தெரிஞ்சிருக்கு. யாரோ "Independent/சுயேச்சை" என்று புதிதாக கட்சி ஆரம்பிச்சிருக்காங்க போல... அவங்கதான்பா மூன்றாவது இடம்....
20 வார இதழ்களில் 2 கதை வீதம் = 20 * 2 * 52 = 2080
50 மாத இதழ்களில் 2 கதை வீதம் = 50 * 2 * 12 = 1200
30 மாதமிருமுறைகளில் 2 வீதம் = 30 * 2 * 24 = 1440
50 சிறுகதைத்தொகுப்பில் 10 வீதம்= 50 * 10 = 500
50 நாவல்கள் = 50 * 1 = 50
...
தோராயமாக ஒரு வருடத்தில் 5350 கதைகள் வெளியாகிறது.

இவற்றிலிருந்து ஒரு 100 நல்ல கதைகள்கூடவா தமிழ்சினிமாவிற்கு கிடைக்காமல் போகிறது!
7 ஆம் அறிவு படத்தின் ஆரம்பகால விளம்பரங்களின்போது, 'போதிதர்மன் ஒரு தமிழன்' என்று நாம் பெருமைப்படவேண்டும் என்றார்கள்...

படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவே, வேறு சில மொழிகளிலும் வெளியிடுவதற்கு ஏதுவாக இப்போதைய பேட்டிகளிலும் விளம்பரங்களிலும் 'போதிதர்மன் ஒரு இந்தியன்' என்கிறார்கள்...

இன்னும் சில கோடிகள் பட்ஜெட் அதிகரித்திருந்தால், ஆப்பிரிக்காவிலும் அன்டார்டிகாவிலும் படத்தை வெளியிட ஏதுவாக, ''போதிதர்மன் ஒரு மனிதன்' என்றிருப்பார்கள்...

போதிதர்மனைவிட பண(அ)தர்மனே மேலோங்கி நிற்பதாகத்தோன்றுகிறது அவர்களின் வியாபாரத்தந்திரங்களில்...



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum